அகங்கார ஒழிவு
தன்னைக் காட்டாது ஒழிக்க வேண்டும் என்பது வள்ளலார் அருளுரை. தற்சுதந்திரம் இல்லாமல் இருந்தால் தான் இறைவனின் பெருமையை நினைந்து நினைந்து உணர முடியும் என்பது இதன் மூலக்கரு.
இறைவனின் பெருமையை உணர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் சில அருளாளர்கள் தங்களது நிலையினை உணராமல் தாங்கள் மட்டுமே சில தியான உண்மைகளை கண்டுப்பிடித்திருக்கிறோம் என்று பறைச் சாற்றுகிறார்கள்.
இறைவனால் தான் அனைத்தும் வெளிப்பட்டது என்று தெரிவிக்காமல் தங்களது முத்திரையைப் பதித்து தங்களது பெயர்கள் பிரபலமாக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் தன்னுடைய பெயரையோ, மொழியையோ, இனத்தையோ, மதத்தையோ குறிப்பிடாமல் பொதுமறையாக (secular) எழுதி வைத்தார். இது அவருடைய பொது நோக்கு பார்வையை எடுத்துக்காட்டுகிறது.
சில தியான மையங்களில் அவ்வருளாளர்கள் கையை காண்பித்து அருளாசி வழங்குவது போல் இறைவனுக்கு சமமாக அவரது படத்தை வைத்திருக்கிறார்கள். இது அவருக்கு புகழை தரலாம் ஆனால் அருள் கிட்டாது என்பது திருவருட்பாவை படிப்பவர்களுக்கு தெரியும்.
இறைவனை உள்முகமாக உணர்ந்த சில அருளாளர்கள் மாயை வசப்பட்டு “நான்” என்ற அகங்காரத்தில், நானே இறைவன் என்ற குறுகிய வட்டத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். அதனால் தான் வள்ளலார் மிக அருமையான ஒரு வழியை இறைவன் தனக்கு தந்ததாக கூறுகிறார்- எல்லா உயிர்களிடத்தும் இறைவனை காணும் நிலையே மிகப்பெரிய நிலை-ஞானத்தில் ஞானம்.
சமீபத்தில் வாழ்ந்த சில அருளாளர்கள் செய்த தவறுகள் பல உள்ளன. சிறிய ஒளியைப் பார்த்து, இறுமாந்து, ஏமாந்து “நான்” அனைத்தையும் அடைந்து விட்டேன், கண்டுக்கொண்டேன் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்ளுவதோடு அவர்களை நாடி வரும் சீடர்களையும் அபக்குவ நிலைக்கு ஆளாக்குகிறார்கள்.
காய கற்ப பயிற்சி மட்டுமே இறைநிலையை காண்பிக்கும் என்பது அவர்களது வாதம். காய கற்ப பயிற்சியும் தேவையில்லை என்பது சித்தர்களின் வாதம். அதனால் தான் அகஸ்தியர் ஞானத்தில் இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது.
மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்
-அகஸ்தியர் ஞானம்
எனவே வள்ளலார் வழி நிற்போர் அகங்காரம் ஒழித்து இறைவனை ஜோதி ரூபமாக ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் வழிபாடு செய்து எல்லா உயிர்களிடத்தும் அன்போடு நடந்து கொண்டால் மனம் செம்மையாகி இறை நிலை வெளிப்படும். இந்நிலை மற்றவர்கள் காணா உயர்நிலையாகும்.
அவ்வாறு ஜீவகாருண்ய ஒழுக்கமில்லாமல் காய கற்ப பயிற்சியை பயிலுவோர் உண்மை இறை நிலையை உணர முடியாது. அதுவும் ஒரு உலகியியல் உணர்வாக போய்விடும், வள்ளலார் கண்ட ஞான நிலைக்கும், குண்டலினி யோக பயிற்சிக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. இதை சன்மார்க்கிகள் உணர வேண்டும்.
மேலும் மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் தியான மைய யோகிகள் அவர்களை முன் வைத்து யோக பயிற்சி மேற்கொள்வது ஏன் ? இதுவும் தற்சுதந்திரமின்மை இல்லாததால் தான் ஏற்படுகிறது.
வள்ளலார் “தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இந்த உலக மக்கள் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள் ஐயோ! நம் சகோதர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினால் தானே என்னைச் சுற்றுகிறார்கள் என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன் என்கிறார்”.
இன்றைக்கு எத்தனை தியான மைய யோகிகளின் மன நிலை இவ்வாறு இருக்கிறது என்பதை சற்றே யோசித்து பார்த்தீர்களேயானால் வள்ளலாரின் செம்மை மனம்- அகங்காரமில்லா மனம் உங்களுக்கு புரியும். |